தமிழகம்

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்க சிறப்பு முகாம்கள்

செய்திப்பிரிவு

இந்திய அஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம்கள் சென்னை வடக்கு அஞ்சல் கோட்டத்தில் நடைபெற்று வருகிறது. மார்ச் 31-ம் தேதி கடைசி நாளாகும்.

இது தொடர்பாக சென்னை வடக்கு அஞ்சல் கோட்டத்தின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கி.ரவீந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பெண் குழந்தைகளின் நலன் பேணும் வகையில் இந்திய அஞ்சல் துறை செல்வமகள் சேமிப்புக் கணக்கு திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் வசதிக்காக கணக்கு தொடங்குவதற்காக பரிவர்த்தனை நேரத்தை அஞ்சல்துறை ஒரு மணி நேரம் நீட்டித்துள்ளது.

இதுமட்டுமன்றி சென்னை அண்ணாநகர், அயனாவரம், பெரம்பூர், புளியந்தோப்பு, வியாசர்பாடி, கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட சென்னை வடக்கு அஞ்சல் கோட்ட பகுதிகளில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட நடத்தப்படுகின்றன. வரும் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்த முகாம் தொடர்பான விவரங்களை அறிய 9952402822 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT