தமிழகம்

மாமல்லபுரம் சுற்றுலா தலத்தில் உலக கைவினை நகரக் குழு ஆய்வு: உலகளாவிய சிற்பக் கலை நகரமாகுமா?

செய்திப்பிரிவு

மாமல்லபுரத்தை உலகளாவிய சிற்பக் கலை நகரமாகத் தேர்வு செய்வதற்கான தகுதி உள்ளதா என்பது குறித்து, உலக கைவினை நகரக் குழுவினர் நேற்று மாமல்லபுரத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.

உலக கைவினை நகரக் குழு, உலகளவில் சிற்பக் கலை மிகுந்த நகரைத் தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. தற்போது இந்தியா, சீனா, வங்கதேசம், குவைத் ஆகிய 4 நாடுகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மாமல்லபுரம் பகுதி யில் கடற்கரை கோயில் மற்றும் குடைவரை கோயில்கள் ஆகிய வற்றை உலக கைவினை நகரக் குழு உறுப்பினர்களான குவைத் தைச் சேர்ந்த காடா ஹிஜ்ஜாவி கதூமி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெவின் மர்ரே, வங்கதேசத்தைச் சேர்ந்த ரூமி கஸ்னாவி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடற்கரை கோயில், ஐந்து ரதம், வராக மண்டபம், அர்ஜூனன் தபசு மற்றும் அரசு அருங்காட்சியகம், சிற்பக்கலைக் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

தமிழ்நாடு கைவினை மேம் பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் சந்தோஷ் பாபு தலைமையிலான அலுவலர்கள், சிற்பக் கலை நுணுக்கங்கள் மற்றும் அதை அமைத்த பல்லவ மன்னர்களின் விவரங்களை அவர்களுக்கு விளக்கிக் கூறினர்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை அலுவலகம், தனியார் சிற்பக் கலைக்கூடங்கள் ஆகிய வற்றையும் அந்தக் குழுவினர் பார்வையிட்டனர்.

முன்னதாக, பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் அமைத்தது மற்றும் மாமல்லபுரம் சிற்பங்களில் உள்ள வரலாற்று ஐதீகங்களை விளக் கும் 7டி அனிமேஷன் திரைப் படம் அந்தக் குழுவினருக்காக தனியார் திரையரங்கில் ஒளிபரப்பப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத், செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் தனலட்சுமி உள்ளிட்ட அலுவலர் கள் உடனிருந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கைவினை மேம்பாட்டு வட்டாரங் கள் கூறியதாவது:

உலகளாவிய சிற்பக் கலை நகரமாக மாமல்லபுரம் அங்கிகரிக்கப்பட்டால், இங்குள்ள அரசு சிற்பக் கல்லூரிகளில், வெளிநாட்டினர் வந்து கல்வி கற்க வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், இங்குள்ள சிற்பக் கலை கல்லூரிகள் சர்வதேச தரம்பெறும். மேலும், தொழில் மற்றும் உள்ளூர் வர்த்தகம் மேம்படும்.

தற்போதும் சிற்பக் கலை பாரம்பரியத்தை பின்பற்றி உள்ளூரில் சிற்பங்கள் தயாரிக்கப் படுவதால், மாமல்லபுரத்துக்கு சிற்பக் கலை நகரம் என்ற அந்தஸ்து நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதேபோல, காஞ்சிபுரத்தை பட்டுநகரமாக அறிவிக்கக் கோரி, மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின்பேரில் தமிழக அரசு உலக கைவினை நகரக் குழுவுக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றனர்.

          
SCROLL FOR NEXT