தஞ்சாவூர்: தமிழகத்தில் நடப்பாண்டில் மட்டும் 34.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை நேற்று ஆய்வு அவர் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடப்பு நெல் கொள்முதல் பருவம் கடந்த செப்டம்பரில் தொடங்கியது. தொடர்ந்து, இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி வரை 3,496 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 34.50 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
4 லட்சத்து 2,971 விவசாயிகளுக்கு ரூ.8,716 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாள் வரை 23.56 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கடந்த ஆண்டைவிட 11 லட்சம் டன் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் இதுவரை 29.38 லட்சம் டன் நகர்வு செய்யப்பட்டுவிட்டது. மீதமுள்ள 5 லட்சத்து 11,996 டன் நெல் நாள்தோறும் 40,000 டன் முதல் 45,000 டன் வரை நகர்வு செய்யப்பட்டு வருகிறது.
ரயில் மூலம் கடந்த அக்டோபர் முதல் மார்ச் 8-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் இருந்து 7.31 லட்சம் டன் நெல் நகர்வு செய்யப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்காக 1 கோடியே 42 லட்சத்து 11,279 சாக்குகள், 303.958 டன் சணல்கள், 27,610 பிளாஸ்டிக் தார்ப்பாய்கள் இருப்பில் உள்ளன. மாநில அளவில் 3.03 கோடி சாக்குகள் இருப்பில் உள்ளன.
மேலும், 2022-ம் ஆண்டு முதல் கடந்த ஜன.15 வரை, 18 மாவட்டங்களில் 54 இடங்களில் 7.33 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய 383 நவீன நெல் சேமிப்புத் தளங்களை ரூ.825.79 கோடி மதிப்பில் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் ரூ.331.08 கோடி மதிப்பில் 4.03 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட 253 சேமிப்புத்தளங்கள் புதிதாகக் கட்டப்பட்டு, தமிழக முதல்வரால் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளன.
நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் 1 லட்சத்து 30,960 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டு, தற்போது வரை 1 லட்சத்து 6,047 ஹெக்டேரில் (81 சதவீதம்) அறுவடை நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பகுதிகளில் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.