தமிழகம்

பிஎஸ்என்எல் முறைகேடு: தயாநிதி மாறன் செயலாளர் உட்பட மூன்று பேரின் காவல் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு தொடர்பான வழக்கில், தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலாளர் உட்பட 3 பேரின் நீதிமன்ற காவலை மார்ச் 4-ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, அவரது வீட்டில் 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை சன் டி.வி.க்கு முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில், தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த வி.கவுதமன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி மூவரும் இரண்டாவது முறையாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி தள்ளுபடி செய்தார்.

இதனிடையே, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் மூவரது நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸார் சிபிஐ சிறப்பு நீதிமன் றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களது நீதிமன்றக் காவலை வரும் மார்ச் 4-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி உத்தர விட்டார். இதையடுத்து, மீண்டும் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT