தமிழகம்

தேர்தல் நிகழ்ச்சிகளுக்கு மின் திருட்டு: பறக்கும் படை சோதனை தீவிரம்

ஹெச்.ஷேக் மைதீன்

தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு மின்சாரம் திருடப்படு வதாக வந்த புகார்களையடுத்து, மின் திருட்டைக் கண்டுபிடிக்க தனிப்படை சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. முதல் நாள் சோதனையில், கும்மிடிப் பூண்டியில் இரால் பண்ணையில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச் சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம், பொதுக் கூட்டங்கள் மற்றும் வீதி தோறும் வாக்கு சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சாரம் திருடப்படுவதாக புகார்

கோடை வெயில் அதிகரித்துள்ளதால், அரசியல் கட்சியினர் பகல் நேரத்தை விட மாலை நேரம் மற்றும் இரவு நேரத்திலேயே அதிக அளவு பிரச்சாரப் பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால் தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஒலிபெருக்கி உபகரணங்கள் அமைத்தல், தெரு விளக்கு, சின்னம் மற்றும் தலைவர்களின் படங்களுடன் கூடிய வண்ண விளக்குகள் அமைத்தல் போன்றவற்றுக்கு, சில இடங்களில் தெருவோர மின்சாரப் பெட்டியிலிருந்து மின்சாரம் திருடப்படுவதாக புகார் கள் எழுந்துள்ளன.

அரசியல் கட்சியினர் மீது வழக்கு

சென்னையில் வண்ணாரப் பேட்டை பகுதியில் மின்சாரம் திருடியதாக, மின்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் மூலம் சில அரசியல் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தேர்தல் அதிகாரிகளின் வேண்டுகோளுக் கிணங்கவும், புகார்களின் அடிப்படையிலும், மின் திருட்டைக் கண்டுபிடிக்கும் சிறப்பு பறக்கும் படையினரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மின் திருட்டைக் கண்டுபிடித்தால், அதை புகைப்படமோ, வீடியோவோ எடுத்து உடனடியாக தேர்தல் அதிகாரிகளிடம் கொடுக்குமாறு பறக்கும் படையினருக்கு உத்தர விடப்பட்டுள்ளதாக, மின் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மின் திருட்டு

இதேபோல், தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் தேர்தல் பணிமனை போன்றவற்றின் பயன்பாட்டுக்கு, தனியார் வீடுகள், அரசு கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மின்சாரம் எடுக்கப்பட்டாலும், அதையும் மின் திருட்டாகவே கணக்கிட்டு, அதற்கு மின்சாரச் சட்டம் 2003-ன் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

தேர்தல் தொடர்பான மின் திருட்டுக்கான அபராதத்தையும், மின் திருட்டின் மதிப்பையும் தேர்தல் செலவுக் கணக் கில் சேர்க்கவும், தேர்தல் அதிகாரி களுடன் இணைந்து, மின் துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

புகார் அளிக்க

மின் திருட்டு இருந்தால், அதுகுறித்து சென்னைக்கு 044 28412906, கோவைக்கு 0422 2499560, மதுரைக்கு 0452 2422166 மற்றும் திருச்சிக்கு 0431 2537508, சென்னை தலைமையிடத்துக்கு 9445856455 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் நாள் சோதனையில் சென்னை அருகே கும்மிடிப்பூண் டியில் இரால் பண்ணையில் ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ரூ. 5 லட்சத்து 64 ஆயிரம் அபராதம் வசூலித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தல் தொடர்பான மின் திருட்டுக்கான அபராதத்தையும், மின் திருட்டின் மதிப்பையும் தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்க மின் துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

          
SCROLL FOR NEXT