மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் அறிவித்திருந்த வனநுழைவுப் போராட்டத்தை போலீஸ் மற்றும் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வனத்துறையில் உள்ள வனச்சரகர் பணியிடங்களில் 100 சதவீதமும், மற்ற வனப்பணியிடங்களில் கணிசமான இடஒதுக்கீடும் கோரி கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் அமைந்துள்ள அரசு வனக்கல்லூரி மாணவர்கள், 26-வது நாளாக நேற்றும் உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். 5 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்ததால், சுமார் 64 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அவர்களில் 14 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் மறுபடியும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வனத்துக்குள் நுழைந்து வசிக்கப் போவதாக மாணவ, மாணவியர் நேற்று திடீர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து வன அலுவலர்கள், போலீஸார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ‘நீங்கள் வனத்துக்குள் சென்றால் வனச் சட்டப்படி கைது செய்ய வேண்டி வரும். அதன்பின் நீங்கள் எந்த பணிக்கும் செல்லமுடியாத நிலை ஏற்படும்’ என்று எச்சரிக்கை செய்தனர்.
தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், வேளாண் பல்கலை துணைவேந்தர் வந்தால், உண்ணாவிரதத்தையோ, வனநுழைவுப் போராட்டத்தையோ கைவிடுகி றோம் என்று மாணவர்கள் உறுதி கொடுத்தனர். இதற்கிடையே நேற்று மருத்துவமனைக்கு வந்த திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்.