தமிழகம்

தொலைபேசி இணைப்பு முறைகேடு தொடர்பான வழக்கு: சன் டிவி ஊழியர்களின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

செய்திப்பிரிவு

தொலைபேசி இணைப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் மற்றும் சன் டி.வி. ஊழியர்களின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, அவரது வீட்டில் 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், தயாநிதியின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி கவுதமன் உட்பட 3 பேரும் தாக்கல் செய்த மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 3 பேரும் 2-வது முறையாக ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘‘விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. இன்னமும் ஆவணங்களை சேகரித்து, உண்மை நிலையை வெளிக் கொண்டு வரவேண்டும். இந்நிலையில், இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்கக்கூடும். எனவே, ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண் டார். கவுதமன் உள்ளிட்ட 3 பேரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, ‘‘பொதுவாக குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை சேகரித்த பிறகே குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர். இந்த வழக்கில் தலைகீழாக நடக்கிறது. மனுதாரர்களிடம் விசாரணை முடிந்துவிட்டது. அதன்பிறகும் அவர்களை சிறையில் வைத்திருப் பது அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். எனவே, மனுதாரர் களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி, மனுக்கள் மீதான தீர்ப்பை செவ் வாய்க்கிழமை (இன்று) அளிப்ப தாக கூறி வழக்கை தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT