எம்.ஜி.ஆரிடம் 35 ஆண்டுகள் மெய்க்காப்பாளராகப் பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணனுக்கு மலேசியாவில் நடந்த விழாவில், ‘எம்.ஜி.ஆர். விருது’ வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு திரைத்துறையிலும் அரசியலிலும் 35 ஆண்டுகள் மெய்க்காப் பாளராகப் பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். 84 வயதாகும் அவர், தற்போது சென்னை கோபாலபுரத்தில் வசித்து வருகிறார்.
இவரது மகன் கோவிந்தராஜ், எம்.ஜி.ஆருடன் தனது தந்தைக்கு ஏற்பட்ட அனுபவங்களை ‘மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.’ என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா மலேசிய நாட்டின் தைப்பிங்நகரில் அண்மையில் நடந்தது. இந்த நூலை, மலேசிய எம்.ஜி.ஆர். நற்பணி இல்லத் தலைவர் ஆர்.ஜே.தாமோதரன் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து மலேசிய நாட்டின் பினாங்கு நகரில் நடந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆரிடம் 35 ஆண்டுகள் மெய்க்காப் பாளராகப் பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணனுக்கு ‘எம்.ஜி.ஆர். விருதை’ பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி வழங்கிப் பாராட்டினார். இந்த விழாக்களில் மலேசிய எம்.ஜி.ஆர். நற்பணி இல்லத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.