தமிழகம்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது: மின்சார உற்பத்தி நிறுத்தம் 210 மெகாவாட் இழப்பு

செய்திப்பிரிவு

வடசென்னை அனல் மின் நிலைய கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இரு நிலைகள் கொண்ட இந்த மின் நிலையத்தில், முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில், தலா 210 மெகாவாட் என 630 மெகாவாட் மின்சாரமும், 2-வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இச்சூழலில், கடந்த 2 மாதங்களுக்கு முன், 2-வது நிலையின் முதல் அலகில் டர்பன் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல் நிலையின் 2-வது அலகில் கொதிகலனில் நேற்று முன் தினம் இரவு பழுது ஏற்பட்டது. இதையடுத்து, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கொதிகலனில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பணி முடிந்த பிறகு, மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

          
SCROLL FOR NEXT