தமிழகம்

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 30 சிப்காட் தொழில் வளாகங்கள்

816 தொழிற்சாலைகளுக்கு 7,558 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

சென்னை: திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 30 சிப்காட் தொழில் வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டு, 816 புதிய தொழிற்சாலைகளுக்கு 7,558 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் 2021-ல் ஆட்சி பொறுப்பேற்றபின் தமிழகத்தை 2030-க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்தார்.

          

அதைத்தொடர்ந்து, தமிழகம், வெளிநாடுகளில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்துக்கு முதலீடு செய்ய வரும்படி முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதை யேற்று பலர் முன்வந்தனர்.

அந்த முதலீட்டாளர்களுக்கு நிலம் வழங்க 5 ஆண்டுகளில் 30 புதிய தொழில் பூங்காக்கள் தொடங்கப்பட்டு, 816 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 7,588.798 ஏக்கர் நிலத்தை சிப்காட் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

குறிப்பாக, தூத்துக்குடியில் வின்பாஃஸ்ட் மின்வாகனத் தொழிற்சாலை, ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்டு ரோவர் கார் தொழிற்சாலை, ஜெயங்கொண்டத்தில் காலணி தொழிற்சாலை, கிருஷ்ணகிரியில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை என பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், பல தொழிற்சாலைகள் தொடர்ந்து திறக்கப்பட உள்ளன. இதன்மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இவற்றின் காரணமாக தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT