காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவி லிருந்து இந்தியா திரும்பிய நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தென்னாப்பிரிக்கா சென்றிருந்த மகாத்மா காந்தி, 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி மீண்டும் இந்தியா திரும்பினார். காந்தியடிகள், இந்தியா திரும்பி நூறாண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் விழா நடந்தது.
இதில் ஏ.கே.செட்டியார் தயாரித்த “20 நூற்றாண்டின் மகான்” என்ற ஆங்கில ஆவணப்படம் திரையிடப்பட்டது. மேலும், காந்தியடிகள் பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் சொற்பொழிவாற்றினார்.
முன்னதாக பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ‘‘இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வியுற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜபக்சவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டியுள்ளனர். ராஜபக்சவின் தோல்வி பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஒரு பாட மாகும். ஏனென்றால் ராஜபக்சவும், மோடியும் நாணயத்தின் இருபக்கத்தை போன்றவர்கள்.
இலங்கையின் புதிய அரசு, தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, இலங்கையில் தமிழர்களுக்காக கட்டிக்கொடுத்த வீடுகளில் 25 ஆயிரம் வீடுகள் சிங்களர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.