தமிழகம்

அரசுப் பணிகளுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான தனி சான்றிதழ் தர வேண்டியதில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோ ருக்கான இடஒதுக்கீடு சலுகையை கோரும்போது, தமிழில் பயின்ற தற்கான தனிச்சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பாளைய புரத்தைச் சேர்ந்த எம்.மல்லிகா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

நான் தமிழ் வழியில் எம்ஏ, பிஎட் முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள் ளேன். தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணித் தேர்வு தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறை இயக்குநர் 9.5.2013-ல் அறிவிப்பு வெளியிட்டார்.

ஆதிதிராவிடர் பெண்கள் பிரிவில் தமிழில் கல்வி பயின் றோருக்கான இடஒதுக்கீட்டு இடத்தில் விண்ணப்பித்தேன். பணித்தேர்வில் வென்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டேன். தமிழ் வழியில் கல்வி பயின்றதற்காக தனிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், தேர்வு முடிவு பட்டியல் ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை.

ஆனால், தமிழ்வழி கல்வி பயிலாதோர் பட்டியலில் என்னை சேர்த்து நிராகரித்துள்ளனர். எனக்கு இடஒதுக்கீடு வழங்கி முதுகலை பட்டதாரி ஆசிரியராக நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.தாளைமுத்தரசு வாதிடும் போது, மனுதாரரைக் காட்டிலும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்காக தனியாக ஒரு சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறி மனுதாரருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் கல்வி முழுவதையும் தமிழில் பயின்றுள்ளார். அதைக் குறிப்பிட்டு மனுதாரர்களுக்கு கல்விச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக அடை யாள அட்டையிலும் தமிழ்வழி கல்வி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழில் படித்ததற்கான பல சான்றுகள் இருக்கும்போது, அரசுப்பணியில் தமிழில் கல்வி பயின்றதற்கான சலுகை கோருகையில், அதற்கென தனியாக ஒரு சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டியதில்லை. எனவே மனுதாரருக்கு சலுகை வழங்கி 4 வாரத்தில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

          
SCROLL FOR NEXT