புலிகள் பாதுகாப்பு மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றில், தேசிய அளவில் ஆனைமலை புலிகள் காப்பகம் சிறப்பான செயல்பாட்டுக்காக விருது பெற்றுள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவின்பேரில், கடந்த மாதம் நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. தேசிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் புலிகள் கணக்கெடுப்பு தொடர்பான கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதுமுள்ள புலிகள் காப்பகங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், தமிழகத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் தகவல் தொழில்நுட்ப அணுகுமுறையில் சிறந்த செயல்பாட்டுக்கான விருதைப் பெற்றுள்ளது. கணக்கெடுப்பு விவரங்களை எம்.இ.இ. என்ற அமைப்பு தொகுத்து வழங்கியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் புலிகள் வாழ்விட அமைப்பு, வளர் சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து தேசிய புலிகள் பாது காப்பு ஆணையம், முடிவுகளை வெளியிட்டுள்ளதாகவும் வனத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கோவை, திருப்பூர், திண்டுக் கல் என மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலி கள் காப்பகம் 1479 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. தமிழகத் தில் உள்ள 4 புலிகள் காப்பகங் களில் அதிக பரப்பளவைக் கொண்டதாக இது உள்ளது. இதில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்போளி, உலாந்தி, அமரா வதி, உடுமலை என ஆறு வனச்சரகங்கள் உள்ளன. இந்த காப்பகத்தில், கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளே விருதினைப் பெற காரணம் என்கின்றனர் வனத்துறையினர்.
2010-ல் நடைபெற்ற கணக் கெடுப்பில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 13-க்கும் அதிகமான புலிகள் இருந்தன. தற்போதைய கணக்கெடுப்பு முடிவில் 23-க்கும் அதிகமான புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. புலிகள் காப் பகத்துக்குள் விலங்கினங்களுக் குத் தேவையான உணவு, நீராதாரங்கள் பெருகியுள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.