பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் தயாநிதி மாறனின் முன்னாள் கூடு தல் தனிச் செயலாளர் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரும் மனு மீதான விசாரணையை பிப்.2-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.
முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்தபோது அவரது வீட்டில் இருந்த 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீசியன் எல்.எஸ்.ரவி ஆகியோரை சிபிஐ அண்மையில் கைது செய்தது.
மூன்று பேரும் சென்னை முதன்மை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ. கிருஷ்ணமூர்த்தி தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனுதாக்கல் செய்தது. உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா இந்த மனுவை நேற்று விசாரித்து, கவுதமன் உள்பட 3 பேரும் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணை பிப்.2-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.