தமிழகம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு - பிப்ரவரி 3-ல் இறுதி விசாரணை

செய்திப்பிரிவு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி உள்ளிட்ட 9 பேரின் தண்டனையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணம் கிருஷ்ணா பள்ளியில் 2004, ஜூலை 16-ல் நேரிட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாயினர். இந்த வழக்கில் பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பழனிச்சாமி யின் மனைவியும் பள்ளித் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜய லட்சுமி, சமையலர் வசந்தி, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

தண்டனை பெற்றவர்கள் தரப்பில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும் வரை, தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கக் கோரி துணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுக்கள் மீது பிப்.3-ல் இறுதி விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT