பாக்ஸ்கான் தொழிற்சாலை நிர்வாகத்திடம் மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆலை நுழைவு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் பாக்ஸ்கான் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதால், போதிய ஆர்டர்கள் இல்லை எனக் கூறி, தொழிற்சாலையை கடந்த 24-ம் தேதி பாக்ஸ்கான் நிர்வாகம் முடியது. இதனால், தொழிற்சாலையில் பணிபுரிந்த 1,200 தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.ஆலையை மூடக் கூடாது என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியதால், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் ஆலையை மூடும் முடிவை தொடர்ந்து வலியுறுத்தியதால், பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால், தொழிற்சங்கங்கள் ஆலை நுழைவு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன.
இந்நிலையில், சிஐடியு தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் ஆலை நுழைவு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஆலை நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட 127 தொழிலாளர்களை கைது செய்து இரவு 7 மணியளவில் விடுதலை செய்தனர்.