மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து கல்லூரிகளும் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில், 15 சதவீதமும், எம்டி, எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளில், 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கப்படுகிறது.
இந்த ஒதுக்கீட்டில், 15 சதவீதம் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும், 7.5 சதவீதம் பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கும், 27 சதவீதம் பிற்படுத்தப்பட்ட (பொருளாதார ரீதியில் முன்னேறிய பிரிவினர் அல்லாத) பிரிவு மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் மத்திய அரசு கடந்த 2007-ம் ஆண்டு கொண்டு வந்த சட்டப்படி, மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அல்லது மத்திய அரசின் உதவி பெறும் கல்வி நிலையங்களில் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.
இந்த ஒதுக்கீட்டை அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் அமல்படுத்த கோரி டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில் “இடஒதுக்கீடு என்பது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொதுவானது எனும் போது, மாநில அரசு கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது சட்டவிரோதமானது.
2008-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் அல்லாத பிற மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் பறிபோய் வருகிறது, இந்த இடஒதுக்கீடு மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் குறிப்பேடு அறிவிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.