தமிழகம்

‘சமூக நீதி காத்த வீராங்கனை’ ஜெயலலிதா வழியில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுங்கள்: பேரவையில் ஸ்டாலின் பேச்சு

செய்திப்பிரிவு

69 சதவிகித இட ஒதுக்கீட்டில் நிறைவேற்றுவதற்குக் காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் பெயரில் ஆட்சி நடத்தும் அரசு, 10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீட்டை அனுமதிக்கக்கூடாது என ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.

இன்று சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

அவர் பேசிய உரையின் விவரம் பின்வருமாறு:

''முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு அறிவித்திருப்பதைப் பற்றி, தங்கள் அனுமதியோடு சில விளக்கங்களை இந்த அரசின் மூலமாக நான் பெற விரும்புகின்றேன்.

நீட் தேர்வு தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, மாநில உரிமைகளை எல்லாம் கொஞ்சம் கூட மதிக்காமல், சட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கிறது. மாணவியர்கள் அதனால் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

அதுபோல், அந்த மாணவிகளைப் பெற்றெடுத்திருக்கக்கூடிய பெற்றோர்களினுடைய மன அழுத்தம் ஒரு பக்கம் இருந்து கொண்டிருக்கின்றது. அந்தத் தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைகள் இப்பொழுது நடைபெற்று வருகின்றது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று இதே சட்டப் பேரவையில் 01-02-2017 அன்று ஏகமனதாக அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இன்றைய தேதி வரையில் 2 மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால், மத்திய அரசு இதுவரையில் அதற்குரிய ஒப்புதலைத் தரவில்லை. அது மத்திய அரசின் அலமாரியில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கின்றது. தமிழக மாணவ, மாணவியர்களுடைய எதிர்கால நலனுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு இருக்கக்கூடிய இந்தப் பின்னணியில் 2019-20 ஆம் ஆண்டிற்கு மாணவ சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் 05-6-2019 அன்று வெளியிடப்பட்டு விட்டது.

அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு இந்நேரம் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனா, இதனால் வரையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்ல விரும்புவது, இது திட்டமிட்டு தாமதப்படுத்துவதற்கு ஒரு சதி இருக்கின்றது என்பதைத்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

இதனால், மாணவ – மாணவியரும் பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள் என்பது, மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கின்றது. முன்னேறிய வகுப்பினருக்காக அவசர அவசரமாக மத்திய அரசு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு அரசு இதனைச் செயல்படுத்தினால் மருத்துவப் படிப்பில் 25 சதவீத இடங்களை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்ற செய்தியும் பரவலாக வந்து கொண்டிருக்கின்றது. சமூக நீதியின் தாயகத்தில் வாழக்கூடிய நம்முடைய நாக்கில் ‘தேனைத்தடவி’ ஏமாற்ற நினைக்கின்றது மத்திய அரசு.

25 சதவீதம் என்ற தூண்டிலை மத்திய அரசு நம் மீது வீசி அதில் நாம் சிக்கிக் கொள்கின்றோமா என்று பாத்துக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு நோட்டம் பார்க்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே, பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டில் நடைமுறையில் சிறப்பான முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அதில் முன்னேறிய சாதியினர் உள்ளிட்ட திறமையுள்ள அனைத்துப் பிரிவினரும் போட்டியிட்டு தேர்ச்சி பெறுகிறார்கள். நமது அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூட, இடங்களை அதிகரிக்க பல நிபந்தனைகளை விதித்து வழக்கமாக பல முட்டுக்கட்டைகளைப் போடக்கூடிய நிலையில் தான் மத்திய அரசு இருக்கின்றது.

இப்பொழுது முன்னேறிய பிரிவினர் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்காக 25 சதவீத இட ஒதுக்கீடு தருகின்றோம் என்று தாமாகவே ஒரு சுயநலத்தோடு முன்வந்து ஒரு தந்திரமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு.

இடங்கள் அதிகரிக்கும் என்று ஏமாற்றி சமூக நீதியையே முதலில் நீர்த்துப் போகச்செய்து, அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகின்றார்கள் என்றால், அதை சாகடிக்கும் சூழ்ச்சியில் மத்திய அரசு இப்பொழுது கடைபிடிக்கின்றது. இது எதைக்காட்டுகின்றது, என்று பார்த்தீர்கள் என்றால் மெல்லக் கொல்லும் விஷம் என்பது மாதிரி, கொடிய விஷம் கொண்ட பாம்பை நல்ல பாம்பு என்று அழைப்பதற்கு ஒப்பானதாக இது அமைந்துவிடும்.

அந்த மயக்கத்திலும், கவர்ச்சியிலும் மாநில அரசு மனம் பறிகொடுத்துவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய கோரிக்கை. அதுமட்டுமல்ல சமூக நீதி காத்த வீராங்கனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்று நாம் சொல்லியிருக்கின்றோம். அதனை நீங்களும் பெருமையோடு பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்.

அந்த அடிச்சுவட்டில் தான் இப்பொழுது ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது என்று சொல்கின்றீர்கள். அதனால், நான் கேட்க விரும்புவது 25 சதவீத கவர்ச்சி வலையில் நாம் விழுந்துவிடக்கூடாது.

ஆகவே, முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து, இந்த அரசின் நிலைப்பாடு என்ன? உங்களுடைய கொள்கை என்ன? என்பதை மேலும் தாமதம் செய்துகொண்டிருக்காமல் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கின்றோம். எனவே, இப்பொழுதாவது, இந்த நேரத்திலாவது இந்த அரசு என்ன நிலையில் இருக்கின்றது என்பதை நீங்கள் அறிவிக்க வேண்டும்.

சமூக நீதியினுடைய தொட்டில் நம்முடைய தமிழ்நாடு. ஏற்கெனவே, கடைபிடித்துக் கொண்டிருக்கிற 69 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த வித சமரசத்திற்கும் இடமில்லை என்ற நிலைப்பாட்டில், இந்த அரசு அசையாமல் – ஆடாமல் – உறுதியாக நிற்க வேண்டும் என்பதைத் தான் திமுக இன்றைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

ஆகவே, உங்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது உடனே இதனைத் தெளிவுபடுத்தி, மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உடனடியாக வெளியிட்டு மாணவர்கள் விரைவில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவக் கல்வி பயிலுவதற்கான ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கிடவேண்டும்.

அதுமட்டுமல்ல, உடனடியாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அங்கீரகரிக்கப்பட்டிருக்கக்கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டி அதில் விவாதித்து அதன் மூலமாக ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

இங்கு அமைச்சர் தன்னுடைய பதில் உரையில் விரைவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் தலைவர்களை அழைத்து கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார்.

அதற்காக, அவருடைய பதில் உரையை நான் வரவேற்க விரும்புகின்றேன். ஆனால், அதே நேரத்தில் நான் இன்னும் சில செய்திகளை இந்த அவையின் கவனத்திற்கு அமைச்சருடைய பார்வைக்கும் கொண்டு வர விரும்புகிறேன்.

இங்கு 69 சதவீத இட ஒதுக்கீடு மண்டல் கமிஷன் பரிந்துரை அவற்றை எல்லாம் இன்றைக்கு இந்தியாவில் நிறைவேற்றுவதற்குக் காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பதை இங்கு குறிப்பிட்டுச்சொன்னார்கள். நானும் அதைத்தான் சொல்லியிருக்கின்றேன்.

அது வீணாகிவிடக்கூடாது என்பது தான் திமுகவின் கருத்து. சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியிருக்கக் கூடியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு இப்பொழுது முழுமையாக அமல்படுத்தவில்லை. அதிலும் அரைகுறையாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றது.

இன்றைக்கு முழுவதும் அமல்படுத்தி இருந்தார்கள் என்றால், இன்றைக்கு இந்தப் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பில்லை. இன்றைக்குக்கூட 'தி இந்து' பத்திரிகையில் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து 1 சதவீதப் பேராசிரியர் கூட இடம்பெறவில்லை என்ற ஒரு செய்தியை இன்றைக்கு வெளியிட்டிருக்கின்றார்கள்.

எனவே, மத்திய அரசின் அலுவலகங்களில் மண்டல் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீட்டில் இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.

எனவே, வழங்கப்பட்டிருக்கக்கூடிய பொருளாதாரத்தின் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமுதாயத்தில் இருக்கக்கூடிய ஏழைகள் இதில் நிச்சயமாகப் பங்குபெறமுடியாது.

எனவே, தான் நான் சொல்லவிரும்புகின்றேன். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவுகள் கட் ஆப் தற்போது பொதுப்பிரிவில் கட ஆப் மதிப்பெண்களை நெருங்கி வருகின்ற காரணத்தினால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவுகளை விட குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருக்கக்கூடிய பொருளாதாரத்தில் பின்தங்கியோர் அதிகமான மருத்துவ இடங்களைப் பெற முடியும்.

ஏற்கெனவே நீட் தேர்வினால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டு சமூக நீதி சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்தினால். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மருத்துவர்களுடைய பஞ்சம் நிச்சயம் அதிகமாக ஏற்பட்டுவிடும்.

நம்முடைய தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனித்தன்மை இந்தக் கொள்கையைப் பொறுத்தவரையில் இருக்கின்றது. அதைத்தான் நாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். அதில் நாம் வெற்றியும் கண்டு இருக்கின்றோம்.

ஆகவே, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குகின்றோம் என்று மத்திய பாஜக அரசு கூறுகிறது. தமிழகத்தில் சமூக மற்றும் கல்வி அடிப்படையில், பின் தங்கிய பிரிவினர் இட ஒதுக்கீட்டை அறவே அது நீர்த்துப்போக வைக்கும் திட்டமிட்ட நடவடிக்கை இது. இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது''.

 இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT