தமிழகம்

ட்ரோன் மூலம் மல்லிகைச் செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிப்பு: சத்தியமங்கலம் விவசாயிகள் வரவேற்பு

எஸ்.கோவிந்தராஜ்

மல்லிகைப் பூச்செடிக்கு ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரத்திற்கு சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான பவானிசாகர், கொத்தமங்கலம், சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம், பகுத்தம்பாளையம், இக்கரைதத்தப்பள்ளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரபள்ளவில் மல்லி பயிரிடப்பட்டுள்ளது.

மல்லிகைச் செடிகளுக்கு நோய் தாக்குதல் அதிகம் என்பதால் அடிக்கடி பூச்சி மருந்து தெளிக்க வேண்டும். பூச்சி மருந்து தெளிப்பதற்கு அதிக செலவு ஏற்படுவதோடு கால விரயமும் ஏற்படுவதால் மல்லி பயிரிட்டுள்ள விவசாயிகள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினர் பறக்கும் ட்ரோன் இயந்திரத்தை பயன்படுத்தி தோட்டப்பயிர்களுக்கு மருந்து தெளிப்பதை அறிந்து அவர்களை தொடர்பு கொண்டு  சத்தியமங்கலம் அருகே உள்ள கொக்கரகுண்டி பகுதிக்கு வரவழைத்தனர். 

அப்பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகைச் செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. பவர் ஸ்பிரேயர் மூலம் ஒரு நாளைக்கு 2 முதல் 3 ஏக்கர் வரை மட்டுமே மருந்து தெளிக்க முடியும் என்ற நிலையில் ட்ரோன் மூலம் ஒரு நாளைக்கு 40 ஏக்கர் வரை பூச்சி மருந்து தெளிப்பதோடு பூச்சிக்கொல்லி மருந்து தேவை பாதியாக குறைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

செலவினம் குறைவு, எளிதாக கருவியை இயக்குவதோடு குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் மருந்து தெளிக்க முடிவதால் இந்த கருவியை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT