பொருளாதார இட ஒதுக்கீடு சம்பந்தமாக அரசின் நிலையை விளக்கி அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த அடிப்படையில் கடிதம் அனுப்பப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் மருத்துவக்கல்வி இட ஒதுக்கீடு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை மீது திமுக உறுப்பினர் பொன்முடி எழுப்பிய பல்வேறு வாதங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துப் பேசினார்.
முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
“உங்களுடைய தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளதை தான் சொல்லியிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரைக்கும் மத்திய அரசு இதைக் கொடுத்திருக்கிறது. இதை அவைக்குத் தெரிவிப்பது அரசின் கடமை.
அந்த அடிப்படையிலே தான் தெரிவிக்கிறோமே தவிர, அதை ஆதரிக்கிறோம், எதிர்க்கிறோம் என்பது எல்லாம் கிடையாது. இன்றைக்கு கட்சிகளுடைய எண்ணங்களின் அடிப்படையிலே தான் அரசு செயல்படுத்தும். ஆகவே, அரசைப் பொறுத்தவரைக்கும் மத்திய அரசு என்னென்ன திட்டத்தின் வாயிலாக இவ்வளவு சீட்டுகள் கொடுக்கிறோம் என்று சொல்லி ஒரு அறிக்கையை எல்லா மாநிலங்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கும் வந்திருக்கிறது. அந்த அடிப்படையிலே தான் நம்முடைய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதில் மொத்தம் 1000 இடங்கள் வந்தது என்று சொல்லியிருக்கிறார். அதில் 150 அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போய்விடுகிறது. மீதி 850 இருக்கிறது. இந்த 850-ல் 264 பொதுவான ஒதுக்கீட்டுக்குப் போய் விடுகிறது.
மீதி 586 இடங்கள், 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் வரும் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு 586 இடங்கள் நம்முடைய இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலே நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தான் அவையினுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றோம். இதை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து இதை என்ன செய்யலாம் என்று அனைவருடைய கருத்தின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.
உறுப்பினர் பொன்முடி ஏதோ நாங்கள் ஏற்றுக் கொண்டதைப் போல சொல்வது எல்லாம் தவறான கருத்து. ஏனென்றால் இது சட்டப்பேரவை, நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் பதிவாகிறது. பத்திரிகையில் வெளியில் போகும்.
ஆகவே, அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது. அந்தக் கடிதத்தை இன்றைக்கு அவையினுடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினுடைய தலைவர்களுக்கு எல்லாம் தெரிவிக்கின்ற அடிப்படையிலே சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஆகவே, நம்முடைய அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடைய தலைவர்களை அழைத்து இது சம்பந்தமாக என்னென்ன கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்ற அந்த விவரத்தை எல்லாம் அவர்களிடத்திலே தெரிவித்து, அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகுதான் இதில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆகவே, எக்காரணத்தைக் கொண்டும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே இந்த அரசு கடைபிடிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்”
இவ்வாறு முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.