சாதிக்பாட்சா மனைவிக்கு கடிதம்மூலம் கொலை மிரட்டல் வந்ததை அடுத்து அவர் அளித்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 ஜி வழக்கில் சந்தேகமான முறையில் மரணமடைந்த ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சாவின் மனைவி ரேகா பானு. இவர் நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
சமீபகாலமாக ரேகாபானு குடும்பத்தாருக்கு கொலைமிரட்டல் வருவதாக புகார் தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன் அவரது கார்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் தங்கள் குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் நேற்று பாண்டிச்சேரியில் இருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் கொலை மிரட்டல் விடுத்து வாசகங்கள் மிரட்டும் வண்ணம் இருந்துள்ளது.
அனுப்புனர் விலாசம் எதுவும் இல்லாத நிலையில் பாண்டிச்சேரியில் இருந்து போஸ்ட் செய்யப்பட்ட அந்த கடிதத்தை அனுப்பி மிரட்டியதாக இரண்டு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சிலர்மீது சந்தேகம் தெரிவித்து ரேகாபானு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ரேகாபானுவின் புகாரைப்பெற்ற நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை மிரட்டல் மற்றும் பாதுகாப்பு கேட்டு புகாரை அடுத்து நுங்கம்பாக்கம் ஜம்புலிங்கம் தெருவில் உள்ள சாதிக்பாட்சா மனைவி ரேகாபானு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.