சுதந்திர இந்தியாவில் தலித் மக்களின் நலனுக்காக மிக மிகக் குறைவான தொகையை ஒதுக்கிய பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மீண்டும் பதவியேற்றுள்ள பாஜக அரசின் முதல் பட்ஜெட்டில் தலித் மக்களுக்கான நிதி பெருமளவில் குறைக்கப்பட்டு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. பாஜக அரசின் இந்த தலித் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களுக்கான நிதியை உயர்த்தி வழங்குமாறு வலியுறுத்துகிறோம்.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யும் போது எஸ்சி /எஸ்டி மக்களின் மக்கள்தொகைக்கு இணையாக நிதி ஒதுக்க வேண்டும் என்பது மத்திய அரசு வகுத்துள்ள விதியாகும். இதற்கெனப் பட்டியலினத்தவர் துணைத் திட்டம், பழங்குடியினத்தவர் துணை திட்டம் என இரண்டு திட்டங்கள் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தற்போது உள்ள மக்கள் தொகையின்படி எஸ்சி மக்களுக்கு 16.6 %-ம் எஸ்டி மக்களுக்கு 8.6%-ம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஆனால் தற்போது பாஜக அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் சுமார் மூன்றரை சதவிகிதம் அளவுக்குத்தான் எஸ்சி மக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பட்டியலின மாணவர்களின் உயர்கல்விக்காக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே அம்பேத்கர் போராடிப் பெற்ற உரிமை தான் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் என்ற கல்வி உதவித் தொகை ஆகும். அது சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன் மூலம்தான் கணிசமான எஸ்சி மாணவர்கள் உயர்கல்வியைப் பெற முடிந்தது.
ஆனால் கடந்த பாஜக ஆட்சியில் இந்த படிப்பு உதவித் தொகைக்கான நிதி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டது. இப்போது இன்னும் மோசமாக அது குறைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்துக்கு என 6 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு அது 2926.82 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. நிதி அமைச்சரை சந்தித்து மனு அளித்த நேரத்தில் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி குறைவாக இருக்கிறது, அதனால் தலித் மாணவர்கள் உயர்கல்வி பயில்வதில் கடுமையான நெருக்கடி உருவாகி இருக்கிறது என்பதை விளக்கிக் கூறினோம். அவரும் பரிவோடு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஆனால் கடந்த ஆண்டு ஒதுக்கிய தொகையில் பாதிக்கும் குறைவான தொகையே இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அது போலவே டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசன், டாக்டர் அம்பேத்கர் மெமோரியல் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. தலித் மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் தன்னார்வ நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியும் முழுமையாக நிறுத்தப்பட்டிருக்கிறது. துப்புரவுத் தொழிலாளர்கள் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்ட நிதி அமைப்புக்குக் கடந்த ஆண்டு 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது . இந்த ஆண்டு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை.
அதுபோலவே தேசிய பட்டியல் இனத்தவர் நிதி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு 137.39 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. இந்த பட்ஜெட்டில் எஸ்சி மக்களுக்கான திட்டங்கள் அனைத்துக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்டுள்ள தொகை கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட 2,165 கோடி ரூபாய் குறைவாகும்.
பாஜக அரசு ஒரு தலித் விரோத அரசு என்பதற்கு இந்த நிதிநிலை அறிக்கையே சான்றாக இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் தலித் மக்களின் நலனுக்காக மிக மிகக் குறைவான தொகையை ஒதுக்கிய பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும். இந்த அநீதியைக் களைய பாஜக அரசு முன்வரவேண்டும். கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்", என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.