தமிழகம்

கூடைப்பந்து.. மாடலிங்.. குறும்படம்: மூன்று துறைகளில் முத்திரை பதிக்கும் வைஷாலி

ஜி.கனிமொழி

"நான் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், இப்போ நாட்டுக்காக பதக்கம் வென்றிருக்கிறேன். ஒருநாள் நிச்சயமாக அணியின் கேப்டனாவேன்" இந்த நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தவர் வைஷாலி.

சென்னையிலுள்ள எம்.ஓ.பி.., வைஷ்ணவ் கல்லூரியில் வணிகவியல் படித்த இவர் விளையாட்டு தவிர மாடலிங்கும் செய்துகொண்டிருக்கிறார்.

தனது வெற்றிப் பயணம் குறித்தும் அடுத்த இலக்கு குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"நான் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. சிறு வயதில் தடகளத்தில் தான் என் ஆர்வம் இருந்தது. தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றேன். 11-ம் வகுப்பு படிக்கும்போது கூடைப்பந்து விளையாட ஆரம்பித்தேன். தமிழ்நாட்டுக்காக 9 முறை விளையாடிருக்கிறேன். அதில் 3 முறை டீம் கேப்டனாக இருந்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்தில் நடைபெற்றஃபிபா {FIFA} ஆசியான் போட்டியில் கலந்து கொண்டேன். அதில் வெள்ளி பதக்கத்தை வென்ற பொழுதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது.

ஏனெனில், தன் தாய்நாட்டுக்காக விளையாடி பதக்கம் வெல்லும் தருணத்தை விட ஒரு விளையாட்டு வீரர்/வீராங்கனைக்கு முக்கியமானதொரு நிகழ்வு இருக்கவே முடியடஹு. உற்றார் உறவினர்கள் மத்தியில் அது ஒரு தனி கெத்து.

இந்திய அணியில் தேர்வாவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தேசிய அளவிலான ஜூனியர் போட்டியில் விளையாடினேன். அதில் தேர்வாகினேன். அதனைத் தொடர்ந்து இந்திய  அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. தென்னிந்தியாவிலிருந்து தேர்வான ஒரே பொண் நான் தான் என்பது என்னை பெருமிதம் கொள்ளச் செய்தது.

இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டனாக வேண்டும் என்பதே எனது எதிர்கால லட்சியம்" என்று உற்சாகத்தோடு கூறுகிறார் வைஷாலி.

மாடலிங்கிலும் வெற்றியே..

இளைஞர்களுக்காக சென்னையில் நடந்த சென்னை இன்டர்நேஷனல் யூத் பெஸ்ட் [CIYF] நடத்திய பேஷன் போட்டியில் மிஸ் பேஷன் ஐகான் விருது வாங்கியுள்ளார் வைஷாலி.

"என்னோட முதல் பேஷன் ஷோ CIYF, விளையாட்டு வீராங்கனைகள் உடற்பயிற்சிகள் காரணமாக ஆண் தன்மையுடன் இருப்பார்கள் என்ற பொதுப்பார்வை இச்சமூகத்தில் இருக்கிறது. அதன் காரணமாகவே இந்த பேஷன் ஷோவில் பங்கேற்க முதலில் சற்று தயக்கமாக இருந்தது. ஆனால், எனது நண்பர்கள் ஊக்கமளித்தனர். அவர்கள் உற்சாகப்படுத்தியதால் வெற்றி, தோல்வி என்றெல்லாம் யோசிக்காமல் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று மட்டும் திட்டமிட்டேன். எவ்வித எதிர்பார்ப்புமின்றி கலந்து கொண்டேன். ஆனால், மிஸ் பேஷன் ஐகான் விருது வாங்குவேன்னு எதிர்பார்க்கவே இல்லை" என்று புன்னகை பூத்தார்.sadadjpg100

நடிப்பும் கைவந்த கலையே..

மாடலிங்குடன் நிறுத்திவிடவில்லை வைஷாலி. குறும்படங்களிலும் நடித்து வருகிறார். பெண்கள் பலருக்கு பைக் ஓட்டுவது என்றால் மிகவும் புடிக்கும் ஆனால் ஒரு பெண் சாலையில் பைக் ஓட்டிட்டு போனால் எல்லாரும் கேலி பேசுவார்கள் என்று யோசித்தே பலரும் தன் கனவை புதைத்துவிடுகிறார்கள். இது போன்ற மனத்தடை கொண்ட பெண்களுக்காக 'யாத்ரிகா' என்ற ஆல்பத்தில் நடித்துள்ளார் வைஷாலி. தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது இப்பாடல்.

வீட்டுக்குள் அடைபட்டிருப்பவள் பெண் அல்ல வெளியே வந்து சாதிப்பவள்தான் பெண் என்பதற்கு வைஷாலி ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

          
SCROLL FOR NEXT