புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 200 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர். அதில், முத்தையனுக்கு சொந்தமான படகில் சென்ற அவரது மகன்கள் பிரதீப் (27), பிரசாந்த்(25), எ.செல்வராஜ்(48) ஆகிய மூவரும் நேற்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 3 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.
இதனிடையே மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு ஜெகதாப்பட்டினம் மீனவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும், மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.