பட்டுச் சேலைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண் டும் என்று வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டு நெசவு தொழில் சார்ந்தவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் கைத்தறி பட்டு சரிகை சேலை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஒய்.எம்.நாராயணசாமி தலைமை தாங்கினார்.
இக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்கள் கைத்தறி நெசவு தொழிலை குடிசைத் தொழி லாக தங்கள் வாழ்விடத்திலேயே செய்து வருகின்றனர். கைத்தறி உற்பத்தி மற்றும் அதன் மூலப் பொருட்களான கச்சா பட்டு, தூய ஜரிகை, கோரா போன்றவற்றுக்கு கடந்த காலங்களில் வரியே இல்லாமல் இருந்தது. மத்திய அரசு தற்போது புதிதாக சரக்கு சேவை வரியை (ஜிஎஸ்டி) கொண்டு வந்தால் பட்டு சேலையின் விலை அதிகரிக் கும்.
இதனால் நெசவு தொழிலாளர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பட்டு சேலை உற்பத்திக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
இக் கோரிக்கையை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்தி ஊர்வலமாகச் சென்று ஆட்சியரிடம் மனு அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.