தமிழகம்

சாலை விதிகளை மீறியதாக ஒரே வாரத்தில் 8259 வழக்கு: ரூ.13 லட்சம் அபராதம் வசூல்

செய்திப்பிரிவு

சாலை விதிகளை மீறியதாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8,259 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளை தடுக்க சென்னையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக சென்னை போக்குவரத்து போலீஸார் அண்ணா சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் திடீர் வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த 25-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 494 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக 3,720 பேர் மீதும், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக 2,346 பேர் மீதும், தாறுமாறாக வாகனம் ஓட்டியதாக 355 பேர் மீதும், ஒரே பைக்கில் 3 பேர் பயணம் செய்ததாக 1,103 பேர் மீதும், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 241 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 8,259 பேர் மீது போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.13 லட்சத்து 37,800 வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 30 மற்றும் 1-ம் தேதிகளில் மட்டும் 2,289 பேர் மீது சாலை விதிமீறலில் ஈடுபட்டதாக வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

          
SCROLL FOR NEXT