நடிகர் திலகம் சிவாஜி சமுகநலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நடிகர் சிவாஜி கணேசன் சிலை மெரினா கடற்கரைக்கு செல்லும் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி அதை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மெரினா கடற்கரை முன்பாக சர்வீஸ் சாலையில் ஏற்கெனவே உள்ள கண்ணகி, திருவள்ளுவர், ஒளவையார் சிலைகளோடு, நடிகர் சிவாஜி கணேசனின் சிலையையும் அதே சாலையில் அமைக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மெரினா கடற்கரை முன்பாக சிவாஜி சிலையை மாற்றியமைக்க பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.