மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கோரிய வழக்கில் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரியும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிடக்கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு வில், ‘எய்ம்ஸுக்கு இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட் டுள்ளது. தமிழக அரசின் பதிலுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது’ என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஆக.1-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஆக.7-ம் தேதி அவர், எய்ம்ஸ் தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.