தமிழகம்

கடலில் மீண்டும் அடித்து செல்லப்பட்ட காட்டு யானைகள்: பத்திரமாக மீட்ட இலங்கை கடற்படை

செய்திப்பிரிவு

இலங்கையில் உள்ள திரி கோணமலை கடற்பகுதியில் அடித்து செல்லப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு இளம் காட்டு யானைகளை அந்நாட்டு கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கை திரிகோணமலை கடற்பகுதியில் ஒரு கடல் மைல் தொலைவில், அந்நாட்டு கடற்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூரத்தில், கருப்பு நிறத்தில் இரண்டு விலங்குகள் மிதந்து கொண்டிருப்பதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது, இரண்டு காட்டு யானைகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.

உடனே திரிகோணைமலை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, யானைகள் நீந்திக் கொண்டிருக்கும் பகுதிக்கு அவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

பின்னர், கடற்படையினர் மற்றும் வனத்துறையினரின் வழிகாட்டுதலில், மூன்று ரோந்து கப்பல்கள் உதவியுடன், ஸ்கூபா நீர்மூழ்கி வீரர்கள் யானைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, ஸ்கூபா நீர்மூழ்கி வீரர்கள் யானைகளை சுற்றி கயிற்றைக் கட்டி கப்பல்கள் மூலம் கரைக்கு இழுத்து வந்து பின்னர் வனப்பகுதியில் விட்டனர்.

முன்னதாக, கடந்த வாரம் இலங்கையில் உள்ள முல்லைத்தீவு கடற்பகுதியில் 8 கடல் மைல் தொலைவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த காட்டு யானையை மீட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT