பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.8,000-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், ''ஜனநாயகத்தின் 4-வது தூணாக விளங்குபவர்கள் பத்திரிகையாளர்கள். காலம் நேரம் பாராமல் உழைக்கின்ற பத்திரிகையாளர்கள், தாங்கள் ஓய்வு பெற்ற பின், மன நிறைவோடும், மன அமைதியோடும் வாழ்ந்திட வேண்டும் என்பதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
அதனால்தான் அவர் 2011-ல் ஆட்சிப்பொறுப்பேற்ற போது 5,000/- ரூபாயாக வழங்கப்பட்டு வந்த பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 8,000/- ரூபாயாகவும், அதே போல் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப ஓய்வூதியத்தை 2,500/- ரூபாயிலிருந்து 4,750/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்கினார்.
அவர் வழியில் செயல்படும் இந்த அரசு, இன்றைய பொருளாதார சூழலையும், பத்திரிகையாளர் நலனையும் கருத்தில் கொண்டு, பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 8,000/- ரூபாயிலிருந்து 10,000/- ரூபாயாகவும், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 4,750/- ரூபாயிலிருந்து 5,000/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார் முதல்வர் பழனிசாமி.