வெறிநாய்க்கடி நோய் இல்லாத மாவட்டம் (Rabies free district) என்ற பெயரை நீலகிரி பெற உள்ளது. இதற்கான சான்றிதழை குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட் வழங்க உள்ளது.
இந்த தகவலை இபான் (IPAAN) தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தும் நைஜில் ஓட்டர் தெரிவித்துள்ளார். தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
கடந்த 13 ஆண்டுகளாக தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு குடும்பக்கட்டுபாடு அறுவைச்சிகிச்சை, வெறிநாய்க்கடி தடுப்பு ஊசி போடும் சேவையை செய்து வருகிறோம்.
முதன்முதலாக ஊட்டி பகுதிகளில் தெருநாய்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அழைப்பின் பேரில் சேவை செய்யப்பட்டது.
ஈரோடு பகுதிகளில் 6,500 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசியும், 2000 நாய்களுக்கு கு.க ஆபரேஷனும் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் 2,500 நாய்களுக்கு கு.க செய்யப்பட்டது. மதுரையில் 8500 நாய்கள், கோவாவில் 5,000 நாய்கள் என கடந்த ஆண்டு மட்டும் இந்தியா முழுக்க 10 ஆயிரம் நாய்களுக்கு கு.கவும், கோவையில் 2 ஆயிரம், மேட்டுப்பாளையத்தில் 1500 என பல ஊர்களில் கடந்த ஆண்டு 15 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசியும் போடப்பட்டது.
கடந்த செப்டம்பரில் 'மிஷன் ஆப் ரேபீஸ்' என்ற இயக்கத்தை ஆரம்பித்து ஒரே மாதத்தில் 60 ஆயிரம் நாய்களுக்கு இந்தியா முழுவதும் ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டது.
இதற்காக 500 பேர் பணியில் ஈடுபட்டனர். இதையும் சேர்த்து, கடந்த ஆண்டில் மட்டும் 90 ஆயிரம் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளாக இந்தப் பணிகளை நீலகிரி மாவட்டத்தில் செய்ததன் பலனாக இந்த மாவட்டமே ரேபீஸ் நோய் (வெறிநாய்க்கடி) இல்லாத மாவட்டமாக மாறியிருக்கிறது.
ஒரு ஊரில் 10 ஆண்டுகளுக்கு ரேபீஸ் நோயினால் ஒரு நாயோ, ஒரு மனிதனோ, வேறு ஒரு விலங்கோ சாகாமல் இருந்தால் அந்த பகுதிக்கு ரேபீஸ் ப்ரீ மாவட்டம் (Rabbies free district) சான்றிதழையும், பாராட்டையும் அளிப்பது குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட் (வெறிநாய்கடி நோய் தடுப்பு மருந்து தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனம்) வழக்கம்.
அந்த வகையில், நீலகிரியில் இந்த ரேபீஸ் நோய் முற்றிலுமாக 10 ஆண்டுகளுக்கு மேல் ஒழிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த பாராட்டுச் சான்றிதழை நீலகிரி வாங்க இருக்கிறது. இந்த சேவைக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசும், இரண்டு ஆண்டுகளாக அந்தந்த பகுதிகளில் உள்ள நகராட்சி, மாநகராட்சியும் நிதி உதவி வழங்குகிறது.
எந்த உள்ளாட்சி அமைப்புகள் இந்தியாவில் இருந்து தெருநாய் சிகிச்சைக்கு அழைத்தாலும் அங்கு சென்று இந்த சேவையை செய்து வருகிறோம் என்றார்.
இதற்கு முன்பு ரேபீஸ் ப்ரீ மாவட்ட பெருமையை பெற்றிருந்த சென்னை, பின்னர் அந்த நோய் தாக்குதலில் நாய் மற்றும் மனிதர்கள் இறக்க அந்த பெருமை இல்லாமல் போய்விட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சான்றிதழை சிக்கிம் மாநிலத்தின் ஒரு மாவட்டம் பெற்றது. இந்த ஆண்டு நீலகிரி பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.