கோயம்பேடு ரயில் நகரில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 30 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக குடியிருப்பில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
கோயம்பேடு பகுதியில் உள்ள ரயில் நகரில் சுமார் 400 குடியிருப்புகள் உள்ளன. இயற்கை சூழலுடன் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன. ஆனால் குடியிருப்போர் சங்கம் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மரங்களாக வெட்டப்பட்டு வருகின்றன. மரங்களை வெட்டுவதற்கு இங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் மரங்களை வெட்டப்படுவது தொடர் கதையாகவே உள்ளது.
கோயம்பேடு ரயில் நகரில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 30 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக குடியிருப்பில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, இந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறியதாவது:
ரயில்வே துறையில் பணி புரிபவர்களுக்காக, ரயில் நகர் குடியிருப்பு பகுதி 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டது. இந்த குடியிருப்புப் பகுதியே இயற்கை சூழலுடன் காட்சி அளிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழையில் ஒரு மரம் விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரின் கண்ணாடி உடைந்துவிட்டது.
இதையடுத்து குடியிருப்போர் சங்கத்தைச் சேர்ந்தவர் வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து மரங்களை வெட்டி வருகின் றனர். இதுவரை 30 மரங்களை வெட்டி விட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
அனுமதியின்றி மரம் வெட்டக்கூடாது
இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:
அனுமதி இல்லாமல், சென்னையில் எந்த இடத்திலும் மரங்களை வெட்டக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மரங்களை வெட்டும் அவசியம் ஏற்பட்டால், அது குறித்து நேரடி கள ஆய்வு செய்து சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களிடம் கருத்து கேட்டு செய்ய வேண்டும். ஒரு மரத்தை வெட்டினால், அங்கு 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டால் மாநகராட்சியிடம் புகார் அளிக்கலாம்.