தமிழகம்

1,000 ஆண்டுகளுக்கு முன்பு தை திருநாளில் காவிரியில் நீராடிய ராஜேந்திர சோழன்: வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தை பொங்கல் தினத்தில் ராஜேந்திர சோழன் தனது பரிவாரங்களோடு காவிரியில் புனித நீராடியதற்கான ஆதார கல்வெட்டு கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ர மணியன் தெரிவித்துள்ளார்.

கடல் கடந்து கீழ் திசை நாடு களிலும் படை நடத்தி வெற்றிகளை குவித்தவர் ராஜேந்திர சோழன். அவ்வாறு அவர் வெற்றிகண்ட தேசங்களுக்கும் இடங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வுகள் மேற்கொண்டு வரும் குடவாயில் பாலசுப்ரமணியன், அந்தத் தகவல் களை தொகுத்து நூலாகவும் எழுதி வருகிறார். தற்போது லண்டனில் இருக்கும் அவர், ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு தை திருநாளில் ராஜேந்திர சோழன் காவிரியில் நீராடியதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்திருப்பதையும் அதில் உள்ள தகவல்களையும் அலைபேசி வழியாக ‘தி இந்து’விடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

கர்நாடக மாநிலம் கிருஷ் ணராஜசாகர் அணைக்கு அருகில் உள்ளது பெலகோலா. இங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் ஒன்று உள்ளது. காவிரியை தழுவிச் செல்லும் இந்த சிவாலயத்தின் தீர்த்தத் துறைக்கு வலம்புரி தீர்த்தம் என்று பெயர். இந்த கோயிலுக்கு தினமும் சிறப்புப் பூஜைகள் நடப்பதற்கு ராஜேந்திர சோழன் நிவந்தங்களை (மானியங்களை) அளித்துள்ளார். அங்கு உள்ள ‘ஹனகன்னட கல்வெட்டு’ இந்தத் தகவல்களைச் சொல்கிறது.

டிசம்பர் 23-ம் தேதி

இப்பகுதியை தனது ஆளுமைக் குள் வைத்திருந்த ராஜேந்திரன், இப்பகுதியின் மகாதண்ட நாயக னாக பஞ்சவன் மாராயன் என்ற பட்டத்துடன் விளங்கி இருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தை முதல் நாளானது டிசம்பர் 23-ம் தேதியே வந்திருக்கிறது. மேலை நாட்டவர்களின் வானியல் அடிப் படை நாள்காட்டிகளில் (காலண்டர் முறை) தவறுகள் இருந்ததே இதற்குக் காரணம்.

1582-ம் ஆண்டில்தான் மாதத் தின் நாட்களை கோள்களின் அடிப் படையில் கணக்கிட்டு சரிசெய் தார்கள். இதன்படி, சக வருடம் 934 பரிதாபி ஆண்டு உத்தராயண சங்கராந்தியான தை முதல் நாளில் ராஜேந்திர சோழன் தனது பரிவாரங்களோடு பெலகோலா வலம்புரி தீர்த்தத்தில் புனித நீராடியதாக கல்வெட்டு தகவல் சொல்கிறது. இதற்கு சரியான ஆங்கில ஆண்டு குறிப்பானது கி.பி.1012 டிசம்பர் மாதம் 23-ம் தேதி செவ்வாய்கிழமை என்பதாகும்.

இதேபோல் வங்க தேசத்தை வென்ற ராஜேந்திர சோழன், எந்த இடத்தில் இருந்து கங்கை நீரை எடுத்து தமிழகம் கொண்டு வந்தார் என்பதற்கான ஆதாரமும் தெரியவந் துள்ளது. மூலகங்கை, பாகீரதி என்றெல்லாம் சொல்லப்படும் கங்கை நதியில் இருந்து சரஸ்வதி, யமுனை நதிகள் இணையும் புனிதத் துறைக்கு திரிபேணி (திரிவேணி சங்கமம்) என்று பெயர். இங்கு இருந்துதான் சோழப் படைகள் கங்கை நீரை எடுத்து வந்திருக் கின்றன என்பதற்கான சான்றுகளும் கிடைத்திருக்கின்றன என்றார்.

SCROLL FOR NEXT