தேர்தல் தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகிகள் மீது திமுக தலைமை இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்காமல் இருப்பது தோல்வியடைந்த வேட்பாளர்கள், தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர் தலில் 172 தொகுதிகளில் போட்டி யிட்ட திமுக 89 இடங்களில் (51.74 சதவீதம்) வெற்றி பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப் பட்ட 60 இடங்களில் காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 என 9 இடங்களில் (15 சதவீதம்) மட்டுமே வெற்றி பெற்றது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் 2 தொகுதி களில் 100-க்கும் குறைவான வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டனர். 101 முதல் 1,000 வரையிலான வாக்கு கள் வித்தியாசத்தில் 8 தொகுதிகளி லும், 1,001 முதல் 5,000 வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில் 21 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
இதற்கிடையில், திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 21-ம் தேதி சந்தித்தனர். திமுக நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல் லாததால் 33 இடங்களில் காங்கிரஸ் தோற்கும் நிலை ஏற்பட்டது என அவர்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், திமுக செயற் குழு கூட்டம் கடந்த மே 24-ம் தேதி நடந்தது. கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு எதிராக எப்படியெல் லாம் வேலை செய்தார்கள் என்பதை, தோல்வி அடைந்த வேட்பாளர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘தேர்தலில் உள்கட்சி பூசலால் ஒருசில இடங்களில் தோல்வி ஏற்பட்டிருப்பது உண்மைதான். அதுபற்றி செயற்குழுவில் பலரும் தெரிவித்தனர். எதிரிகளைக்கூட மன்னிக்கலாம். துரோகிகளை மன்னிக்க முடியாது’’ என தெரிவித்திருந்தார்.
இதனால், அத்தகைய நிர்வாகி கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியினர் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 வாரங்கள் கடந்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதுதொடர்பாக திமுக நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கட்சி கோஷ்டி பூசல் திமுகவை வீழ்த்திவிட்டது. கூட்டணிக் கட்சிகள் வென்றால் இனி பல தேர்தல் களுக்கு நமக்கு வாய்ப்பு கிடைக் காது என்ற எண்ணம் பல நிர்வாகி களுக்கு ஏற்பட்டது. இதனால் கூட் டணிக் கட்சி போட்டியிட்ட தொகு திகளில் வேலை செய்யவில்லை.
கடந்த 24-ம் தேதி நடந்த செயற் குழுவுக்குப் பிறகு, தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்கள், தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி அடைந்த திமுக வேட்பாளர்கள் சிலரிடம் பேசிய போது, ‘‘அதிமுக தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றபோதிலும், தேர்தல் பணிகளை சரியாக செய்யாத 16 மாவட்டச் செயலாளர்கள் உட்பட பல நிர்வாகிகளை ஜெயலலிதா நீக்கிவிட்டார். ஆனால், கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீதுகூட திமுக தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. துரோகிகளை நீக்காவிட்டால், இனிவரும் தேர்தல்களிலும் இதேபோல துரோகங்கள் தொடரும்’’ என்றனர்.
சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வருவதால் நடவடிக்கை எடுக்க திமுக தலைமை தயங்குவ தாகக் கூறப்படுகிறது.