கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென் னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப் பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக விளங்கி வருவது வீராணம் ஏரி ஆகும். இந்த ஏரியில் இருந்து சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்ட பகுதிகளில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது.
ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். சென்னைக்கு தண்ணீர் அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் கொண்டுவந்து நிரப்பப்பட்டது.
நீர்வரத்து குறைந்தது
ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக தினந் தோறும் 76 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும் கீழணையில் தண்ணீர் இல்லாததால் ஏரிக்கு நீர் வரத்து இல்லை. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. வறட்சியின் காரணமாக தற்போது ஏரியில் 41 அடி தண்ணீரே உள்ளது.
இதன் காரணமாக சென்னைக்கு விநாடிக்கு 35 கன அடி தண்ணீர் மட்டுமே அனுப்பப்படுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாய பாசனத்துக்காக வீராணம் ஏரி திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
10 நாட்களுக்கு மட்டுமே..
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. ஏரியின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மழையும் பெய்யவில்லை. இதே நிலை நீடித்தால் ஏரியில் இன்னும் 10 நாட்களுக்குத்தான் தண்ணீர் இருக்கும்” என்றார்.