திருத்தணி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் மரணமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் தர வேண்டுமென்று தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சொரைக்காய்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசு பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீரையே வழங்க வேண்டும். இனி வரும்காலம் மழைக்காலம். எனவே, அனைத்து இடங்களிலும் குறிப்பாக கிராமபுறம், குடிசை பகுதிகள், மற்றும் தாழ்வான இடங்களில் குப்பைகளை அகற்றி, பள்ளங்களை மூடி, மழைநீர் ஓடும் கால்வாய்களை தூர்வார வேண்டும்.
மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுகக் வேண்டும். முக்கியமாக குடிநீரில் கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும், இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடாக தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.