தமிழகம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சவுதிஅரேபிய அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற பிஎஸ்சி, எம்எஸ்சி செவிலியர் படிப்பு முடித்தவர்களுக்கு எழுத்து தேர்வு நாளை நடக்க உள்ளதாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சவுதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற 2 ஆண்டு பணி அனுபவத்துடன் 30 வயதுக்குட்பட்ட பிஎஸ்சி, எம்எஸ்சி தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கான எழுத்து மற்றும் வாய்மொழித்தேர்வு டெல்லியில் ஜனவரி 27 நாளை முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது. கொச்சியில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரையும் நடக்கிறது.

தேர்வு செய்யப்படும் எம்எஸ்சி முடித்த செவிலியர்களுக்கு ரூ.95 ஆயிரம் முதல் அனுபவத்துக்கேற்ற வகையில் ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரம் வரையம், பிஎஸ்சி முடித்தவர்களுக்கு ரூ.84 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

மேலும், இலவச விமான டிக்கெட், உணவு, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை, போக்குவரத்து, 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் சவுதி அரேபிய அமைச்சகத்தின் சட்டத்துக்குட்பட்ட சலுகைகள் வழங்கப்படும்.

எனவே தகுதியுள்ள செவிலியர்கள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ovemclsn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26-ம் தேதி இன்றைக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 2250 5886, 22502267 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது >http://www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்திலும் அறிந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT