தமிழகம்

பணியிட மாற்ற உத்தரவு ரத்து விவகாரம்: நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராகி வாதிட உச்ச நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

தனது பணியிட மாற்றம் செய்யப்பட்ட உத்தரவை, தானே ரத்து செய்த நீதிபதி கர்ணனுக்கு எதிரான வழக்கில் அவரே நேரில் ஆஜராகி வாதிட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவரை கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித் தார். பின்னர் இதுதொடர்பாக தானாக முன்வந்து தனது பணி யிட மாற்ற உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் இடைக்கால தடை விதித்தார். அன்றைய தினமே இந்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர், நீதிபதி கர்ணன் நீதித் துறை பணியை மேற்கொள்ள கூடாது என உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய் தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் பதில் மனுவை நீதிபதி கர்ணன் தாக்கல் செய்யவில்லை. எனினும், நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற பதிவுத்துறைக்கு 2016 டிசம்பர் 21-ம் அனுப்பியுள்ள கடிதத்தில், தனது வழக்கறிஞர் எஸ்.கவுதமனுக்கு பதிலாக தானே நேரில் ஆஜராகி வாதிடுவதாகவும், தனது சார்பாக ஆஜராகும் கவுதமனை இந்த வழக்கிலிருந்து விடுவிடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விடுவிக்கும்படி கவுதமனும் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

இந்த வழக்கு வரும் பிப்ரவரி 13-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இது குறித்து நீதபதி கர்ணனுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT