தமிழகம்

சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: ஓபிஎஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மாதா நகர் 10வது தெருவில் வசித்து வரும் திரு பாபு என்பவரின் மகள் சிறுமி ஹாசினி என்பவரின் சடலம் 8.2.2017 அன்று அனகாபுத்தூர் அருகே காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.

சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்ததில், அச்சிறுமி உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவரை காவல் துறையினர் கைது செய்து, பின்னர் புழல் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்த சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT