தமிழகம்

எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு ஜாமீன் வழங்க மறுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

திரைப்படங்கள் தயாரிப்பு, விநியோகம் செய்துவந்தவர் வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதன். இவர் 5 பக்கம் கொண்ட கடிதத்தை லெட்டர்பேடில் எழுதி வைத்துவிட்டு கடந்த மே 27-ம் தேதி மாயமானார். எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.

இதற்கிடையில், மதன் மற்றும் அவரது கூட்டாளிகள் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 112 பேர் கொடுத்துள்ள புகாரின்பேரில் ரூ.75 கோடி மோசடி நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தான் வாங்கிய பணத்தை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டதாக தன் கடிதத்தில் மதன் தெரிவித்திருந்தார். இதனால், பச்சமுத்து மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கடந்த 26-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

போலீஸ் காவல்

பச்சமுத்துவை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம், ஒருநாள் மட்டும் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து பச்சமுத்துவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மாணவர்கள் கொடுத்துள்ள பண மோசடி புகார் குறித்தும், மாயமான மதன் குறித்தும் அவரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு பச்சமுத்து தாக்கல் செய்த மனு சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட மாஜிஸ்திரேட், பச்சமுத்துவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பச்சமுத்துவை செப்டம்பர் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT