மாநகர பஸ்களில் வழங்கப்படும் ஒரு நாள் பயணச்சீட்டுக்கு அடையாள அட்டை கேட்டு நிர்ப்பந்திப்பது தேவையற்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் வாசகர் கே.வெங்கடசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்களில் பல ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரு நாள் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்கின்றனர். இது பயணிகளுக்கும், நிர்வாகத்துக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு நாள் பயணச்சீட்டு பெற பயணிகள் கட்டாயம் அடையாளச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் சமீபத்தில் புது உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தேவையற்றது. ஒரு நாள் பயணச்சீட்டு வழங்கும்போது அதில், பயணியின் கையெழுத்து இடம் பெறுகிறது. அப்படி இருக்கும்போது எப்படி முறைகேடு செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பஸ்களில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகளிடம் ஏதாவது ஒரு அடையாள அட்டை இருக்கிறது. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது’’ என்றார்.