ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்து விசாரிக்க அமைக்கப் பட்டுள்ள தனி விசாரணை ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ் வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி சென்னை மெரினா கடற்கரை, மதுரை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 17 முதல் 23-ம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின்போது கடந்த 23-ம் தேதி வன்முறை வெடித்தது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் (ஜன. 31) சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி நடத்தப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த 23-ம் தேதி சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நடந்த சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளுக்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்து விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி இந்த விசாரணையை மேற்கொள்வார்’’ என அறிவித்திருந்தார்.
அதன்படி அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் தலை வராக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமிக்கப்பட் டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
3 மாதத்தில் அறிக்கை
23-ம் தேதி நடந்த சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு மூலமாக இருந்த காரணங்கள், சூழ்நிலைகளை கண்டறிதல், பொது, தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து விசாரித்தல், காவல் துறையினரால் சூழ்நிலைக்கு ஏற்ப பலப்பிரயோகம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரித்தல், காவல் துறையினரின் செயல்பாட்டில் அத்துமீறல் இருந்ததா? அவ்வாறெனில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குதல், இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வழிமுறைகளை வழங்குதல் ஆகிய பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்ளும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மாதங்களில் இந்த ஆணையம் தனது அறிக்கையை அளிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.