ரயில்வே சரக்குக் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியிருப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலையேற்றம் காரணமாக விலைவாசி விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், ரயில்வே சரக்குக் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியிருப்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அரசின் இந்தச் செயல் ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.
சரக்குக் கட்டண உயர்வு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தையும், நாட்டு மக்களையும் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குமே அன்றி,எதையும் நிலைநிறுத்த பயன் தராது எனவே சரக்குக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.