தமிழகம்

இலங்கை கடற்படையால் 2 நாள்களில் 140 தமிழக மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் ராஃபி

கடந்த இரண்டு தினங்களில் (புதன் மற்றும் வியாழன்) இலங்கை கடற்படையினரால் 140 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை முல்லைத்தீவு கடற்பகுதியில் புதன்கிழமை மீன்பிடித்தாகக் கூறி 15 விசைப்படகில் இருந்த 110 நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட 110 நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களையும் திரிகோணமலை காவற்துறையினரிடம் இலங்கை கடற்படையினர் புதன்கிழமை இரவு ஒப்படைத்தனர்.

அதேப் போன்று இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நெடுந்தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்து, அவர்களின் 8 விசைப்படகுகள், வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்களையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் கைது செய்யயப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட 30 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று காங்கேசன் துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக, கடந்த அக்டோபர் 16-ம் தேதி சிறைப்பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களின் காவல் வியாழக்கிழமை முடிவடைந்ததையடுத்து மீண்டும் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களின் காவலை 5-வது முறையாக டிசம்பர் 24 ஆம் தேதி வரையிலும் நீட்டித்து நீதிபதி உத்திரவிட்டார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 140 மீனவர்களையும் திரிகோணமலை மற்றும் காங்கேசன்துறை காவல்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்களா அல்லது மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா என்பது தெரியவரும்.

SCROLL FOR NEXT