நரசிம்ம ராவ் மவுனம் காத்ததால்தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அதனால், அரி எம்பி போன்றோர் தன்னிச்சையாக பேசுபவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டித்து வைக்க வேண்டும். அதைவிடுத்து அவர் இன்னும் எத்தனை காலம்தான் மவுனம் காப்பார் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ. வெற்றிவேல் தெரிவித்தார்.
சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், "எடப்பாடி பழனிசாமி எத்தனை நாட்கள்தான் நரசிம்மராவ் போல் மவுனம் காப்பார்? நரசிம்ம ராவ் மவுனம் காத்ததால் தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
அரி எம்பி போன்று தன்னிச்சையாக பேசுபவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டித்து வைக்க வேண்டும். அரி மீது நடவடிக்கை பாய சற்று தாமதம் ஆகலாம், ஆனால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
சசிகலா கூவத்தூர் செல்லவில்லை என்றால் இன்று அதிமுக ஆட்சி இருந்திருக்காது. கட்சியும் இருந்திருக்காது. நன்றி மறந்து விட்டு யாரும் பேசக் கூடாது.
ஓரளவுக்கு மேல் என்னால் பொறுமை காத்து அனைத்தையும் மறைக்க முடியாது. உண்மையை நான் கூறினால் பலர் அவமானப்பட வேண்டி இருக்கும். கட்சி இப்போதும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது" என்றார்.