பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பாம்பன் பாலத்திலும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டிசம்பர் 6 - பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தீவிரவாத தாக்குதல் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாம்பன் பாலம் மற்றும் ராமேஸ்வரம் ராமநாமநாதசுவாமி கோயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து வருவது வழக்கம். பாபர் மசூதி இடிப்பு தினத்தையோட்டி கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ராமநாதசுவாமி கோயில் கிழக்கு, மேற்கு வாசலில் மெட்டல்டிடெக்டர் கருவி அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளேயும் வெளியேயும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதுபோல ராமேஸ்வரம், ராமநாதபுரம், பாம்பன் ரயில்வே நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே ரயிலில் ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.