தமிழகம்

திருநங்கைகள் 1502 பேருக்கு குடும்ப அட்டை: அமைச்சர் வளர்மதி தகவல்

செய்திப்பிரிவு

திருநங்கைகள் 1502 பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார். பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, "தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் செயல் படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்" என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் கேட்டார். அதற்கு பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, "தமிழகத்தில் 3327 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 963 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களும், 132 பேருக்கு இலவச தொகுப்பு வீடுகளும், 1052 பேருக்கு குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. 10 திருநங்கைகளுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சியும், 320 பேருக்கு சொந்த தொழில்புரிய மானியமும், 3 பேருக்கு கல்வி உதவித் தொகையும், தலா 5 பேருக்கு ஆடு, மாடுகளும் வழங்கப்பட்டுள்ளன. பட்டா உள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை அடிப்படையில் வங்கிக்கடன் மூலம் வீடு கட்டித் தரப்படுகிறது" என்றார். 

          
SCROLL FOR NEXT