வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியுடன் கூட்டணி சேருவது நல்லதோ அதன்படி, கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக காங்கிரஸ் மேலிட வேட்பாளர் தேர்வுக்குழுத் தலைவருமான குலாம் நபி ஆசாத் வியாழக்கிழமை இரவு திடீரென, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் மீண்டும் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேருமா என்பது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியதாவது:
திமுக தலைவர் கருணாநிதியை குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசியது என்ன?
குலாம் நபி ஆசாத் சென்னையில் வந்து தங்குவது எனக்குத் தெரியும். ஆனால், அவர் கருணாநிதியை சந்தித்துப் பேசுவது பற்றி எனக்கு கட்சி மேலிடத்திலிருந்து எந்த தகவலும் வரவில்லை. அவர் மரியாதை நிமித்தமாக மூத்த தலைவர் மற்றும் நண்பர் என்ற முறையில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
நன்றி கெட்ட காங்கிரஸ் என்று திமுக தரப்பில் விமர்சித்த நிலையில், மீண்டும் திமுகவுடன் கூட்டணி சேருவீர்களா?
எங்களுக்கு திமுகவுடனோ, கட்சித் தலைவரிடமோ தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை. கட்சிக்கு எது நல்லதோ, அந்த முடிவை கட்சி மேலிடம் எடுக்கும். மேலிட முடிவுக்குக் கட்டுப்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.