அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் என்ற நாதுசிங், லலித் பாபு பாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோருக்கு கடந்த 1-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஹவாலா தரகர்களாக செயல்பட்ட நரேஷ், லலித் பாபு பாய் ஆகியோருக்கும் நேற்று ஜாமீன் வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட சுகேஷுக்கு மட்டுமே இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.