தமிழகம்

எதிர்ப்பு காலத்தை முடித்து எதிர்காலம் நோக்கி திரும்புங்கள்: தமிழிசை வேண்டுகோள்

செய்திப்பிரிவு

எதிர்ப்பு காலத்தை முடித்து எதிர்காலம் நோக்கி திரும்புவோம் வாருங்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று பல இடங்களில் நடைபெற்றுவருகிறது மகிழ்ச்சி. ஆனால் பல இடங்களில் தேவையின்றி தடைபட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

முதல்வரே முன்னிருந்து நடத்த இருந்த அலங்காநல்லூர் அலங்காரமாக நடைபெற்றிருக்க வேண்டும், அனாவசியமாக பிரச்சினை திசை திருப்பப்பட்டதால் இது நிகழ்ந்து விட்டது. முதல்வரும் பெருந்தன்மையோடு இந்த நிலையை ஏற்று திரும்பிவிட்டார், ஆனால் இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்ப வேண்டும் என்று நிலைக்கு அனைவரும் வந்தடைய வேண்டும்.

இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று மதிப்பளித்து இரண்டு அரசுகள் விரைவுடன் செயலாற்றி அவசர சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் உதவியோடு மாநில அரசு சட்டம் இயற்றிருக்கிறது, நம்மை மதித்து செயலாற்றிய அரசாங்கத்தின் நடவடிக்கையை நாம் மதிப்பதே சரியானதாக இருக்க முடியும்.

இதற்கு முந்தைய காங்கிரஸ் - திமுக ஆட்சியில் பல தடைகளைப் பெற்றதால் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் தடை வந்துவிடுமோ என அஞ்சுவது இயற்கை, ஆனால் இந்த முறை மத்திய அரசு, மாநில அரசின் சட்டத்திற்கு முழு ஆதரவு அளித்திருப்பதால் இது நிரந்தர சட்டம் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எப்போதும் அரசாங்கம் உறுதியளித்தும் அதை அவநம்பிக்கையோடு அரசை குறைகூறுவது சரியானதாக இருக்காது. அதுமட்டுமல்ல ஜல்லிக்கட்டு வேண்டுமென்று தான் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று ஜல்லிக்கட்டு வந்துவிட்டது ஆனால், போராட்டத்தை தொடர்வது நியாயமாக இருக்காது.

அதுமட்டுமல்ல தேசியக் கொடிகள் அவமதிக்கப்படுவதும், பிரதமரை மிக மோசமாக சித்தரிக்கப்படுவதும் திசைமாறியவர்களின் நடவடிக்கை என்பது வெளிப்படுகிறது. அதற்கு நாம் இடம் கொடுத்து விடக் கூடாது. அதனால் நாளைய தினம் பள்ளி கல்லூரிகள் திறக்கிறது உங்கள் எதிர்ப்பு காலம் முடிந்து எதிர் காலத்தை சிந்திக்க வேண்டிய நேரம் அதனால் நாளை பள்ளி கல்லூரிக்கு திரும்பி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

தங்களின் பலத்தை நலமுடனே அரசுகள் உணர்ந்திருக்கின்றன. திசைமாறிப் போகிறதோ என சந்தேகம் எழுப்பி வெளிவந்திருக்கும் 'ஹிப் ஹாப்' ஆதிக்கு என் வாழ்த்துகள். அவரின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நடிகர் விவேக், உண்மையாக ஜல்லிக்கட்டிற்கான தங்கள் உழைப்பை அர்ப்பணித்த சகோதரர்கள் ராஜேஷ், ராஜசேகரன், கண்ணன், சேதுபதி போன்றவர்களைப் பாராட்டுகிறேன்.

அருமைச் சகோதர சகோதரிகளுக்கு பாராட்டுடன் என் வேண்டுகோள். ஆம் எதிர்ப்பு காலத்தை முடித்து எதிர்காலம் நோக்கி திரும்புவோம் வாருங்கள்'' என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT